ரஷ்யாவுக்கு எதிரான புதிய பொருளாதார தடைகள் விதிப்பதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கும் நிலை உருவாகி உள்ளது. லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026 என பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, பிரதிநிதிகள் சபையில் 262-க்கு 159 என்ற வாக்குகள் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே செனட் சபையிலும் 86-க்கு 11 என்ற வாக்குகளில் மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளான இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீதும் 100 சதவீதம் வரை வரி விதிக்க இந்த மசோதா வழிவகுக்கிறது. இந்தியா உட்பட ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும், 10 நாடுகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி இந்த நாடுகளுக்கு, மசோதாவில் இடம்பெற்றுள்ள இரண்டாம் நிலை வரி விதிப்பு பிரிவின் கீழ், அதிகபட்சம், 100 சதவீதம் வரை வரி விதிக்க முடியும்.
இந்த பட்டியலில் சீனா, துருக்கி, அஜர்பைஜான், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில் இந்த நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு, 100 சதவீத வரி விதிக்கப்படும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்து, உக்ரைன் மீதான போர் தொடர்பாக மாஸ்கோ மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இது அமெரிக்க அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்காக வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது.