இந்திய ரிசர்வ் வங்கியின் அப்போதைய ஆளுநர் ரகுராம் ராஜன், இதே 'FCNR(B) சிறப்பு சலுகையை' (Swap Window) திட்டத்தை 2013ம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். திட்டம் அறிவிக்கப்பட்ட வெறும் 3 மாதங்களுக்குள் இந்தியாவிற்குள் 34 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு வந்து சேர்ந்தது
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இந்திய ரிசர்வ் வங்கி லாபகரமான சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த வெளிநாட்டு பண வரவில் (Remittance )சுமார் 10.4% பங்களிப்புடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன், வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள்/இந்தியர்கள் அந்நிய நாணய (குடியிருப்போரல்லாதவர்) கணக்கு (வங்கிகள்) திட்டம் FCNR(B) என்ற கணக்கின் மூலம் பணத்தை சேமிக்க முடியும்.
FCNR(B) மூலம் வெளிநாடு வாழ் தமிழர்கள்/இந்தியர்கள் இந்தியாவில் உள்ள வங்கிகளில் (பொதுத்துறை/ தனியார்) தங்களின் வெளிநாட்டுப் பணத்தை (பவுண்டு, ஸ்டேர்லிங், அமெரிக்க டாலர், ஜப்பான் யென், யூரோ, கனடா டாலர் மற்றும் ஆஸ்திரேலியா டாலர்) அப்படியே குறித்த கால வைப்புக் கணக்காக சேமிக்கலாம். இந்த கணக்கு ஓர் ஆண்டுக்கு குறையாமல் 5 ஆண்டுகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு முதலீட்டாளர் அமெரிக்க டாலராக முதலீடு செய்யும்போது, அது வங்கிக் கணக்கில் டாலராகவே பராமரிக்கப்படுகிறது. இதனால், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலும், வெளிநாடு வாழ் இந்தியர்களின் அசல் சேமிப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. மேலும், இந்த டெபாசிட் மூலம் ஈட்டப்படும் வட்டி வருவாயிற்கு இந்தியாவில் முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. டெபாசிட் காலம் நிறைவடைந்தவுடன், அசல் மற்றும் வட்டித் தொகையை எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி, அவர்கள் வசிக்கும் வெளிநாட்டிற்கே முழுமையாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
பொதுவாக, இந்திய வங்கிகள் வெளிநாட்டுப் பணத்தை டெபாசிட்டாகப் பெறும்போது, எதிர்கால நாணய மதிப்பு மாற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள 'ஹெட்ஜிங்' (Hedging) எனப்படும் காப்பீட்டு முறையைப் பயன்படுத்துகின்றன. இதற்கான கட்டணம் மிக அதிகம் என்பதால், வங்கிகளால் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி வழங்க முடிவதில்லை.
தற்போது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சிறப்புச் சலுகையின்படி, வணிக வங்கிகள் பெறும் வெளிநாட்டுப் பணத்திற்கான இந்த காப்பீட்டுக் கட்டணத்தை (Zero-Cost Hedge) ரிசர்வ் வங்கியே முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. இதன் காரணமாக, இந்திய வங்கிகள் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் 7% வரை மிக உயர்ந்த வட்டியை டாலர் சேமிப்பிற்கு வழங்கத் தொடங்கியுள்ளன. இது அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தை (4- 5%) விடக் கணிசமாக அதிகமாகும். எனவே, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு வேலை தேடியோ, வணிகத்தில் ஈடுபடவோ சென்ற ஒருவர் அந்நாட்டில் உள்ள வங்கியில் பணத்தை சேமிப்பதை விட இந்தியாவில் பணத்தை சேமிப்பது லாபகரமானதாக மாறுகிறது. இந்த சிறப்பு சலுகை 2026 செப் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
பெரிய முதலீட்டாளர்களும்/ தனிநபர்களும் இத்திட்டத்தின் மூலம் தங்களது லாபத்தை பல மடங்கு அதிகரிக்க Leverage எனப்படும் கடன் மூலதன உத்தியைப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, ஒரு முதலீட்டாளரிடம் சொந்தமாக 10,000 டாலர் சேமிப்பு இருப்பதாகக் கொள்வோம். அவர் தான் வசிக்கும் வெளிநாட்டின் (சிங்கப்பூர் அல்லது துபாய்) வங்கியில் இந்த 10,000 டாலரை பிணையாக வைத்து, 5% வட்டியில் கூடுதலாக 90,000 டாலரை கடனாகப் பெற முடியும். இப்போது அவரிடம் உள்ள மொத்தத் தொகை 1,00,000 டாலராக உயர்கிறது.
இந்த 1 லட்சம் டாலரையும் இந்தியாவின் FCNR (B) கணக்கில் 7% வட்டிக்கு அவர் டெபாசிட் செய்கிறார். வெளிநாட்டு வங்கிக் கடனுக்காக 5% வட்டி செலுத்தினாலும், இந்திய வங்கியிடமிருந்து அவருக்கு 7% வட்டி கிடைக்கிறது. இந்த இரண்டு சதவீத வட்டி வேறுபாடு (Spread Profit), அவர் கடனாகப் பெற்ற 90,000 டாலருக்கும் கிடைப்பதால், இறுதியில் அவருடைய சொந்த முதலீடான 10,000 டாலருக்குக் கிடைக்கும் ஒட்டுமொத்த ஆண்டு வருமானம் 20% வரை உயர்கிறது. இத்தகைய கணிசமான லாபமே சர்வதேச அளவில் இந்தத் திட்டத்தின் பால் முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது.
இந்த 'லெவரேஜ்' உத்தியில் அதிக லாபம் இருந்தாலும், இதில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய நிதி அபாயங்கள் உள்ளன. முதலாவதாக, வெளிநாட்டு வங்கிகளில் பெறப்படும் கடன் பெரும்பாலும் மாறுபடும் வட்டி விகிதத்தைக் (Floating Rate - SOFR போன்றவை) கொண்டிருப்பதால், சர்வதேச சந்தையில் வட்டி உயர்ந்தால் லாப வரம்பு குறைந்து நஷ்டம் ஏற்படக்கூடும். இரண்டாவதாக, ஏதேனும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் போது, வெளிநாட்டு வங்கிகள் தங்களது கடனை முன்கூட்டியே திரும்பக் கேட்க சட்டப்பூர்வ உரிமை பெற்றுள்ளன; இதனால் இந்திய வங்கியின் டெபாசிட்டை முன்கூட்டியே உடைக்க நேரிட்டால் அபராதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இறுதியாக, முதலீடு செய்யப்பட்டுள்ள இந்திய வங்கி ஒருவேளை திவாலானால், இந்திய சட்டப்படி 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே டெபாசிட் காப்பீடு (Deposit Insurance) கிடைக்கும். ஆனால், வெளிநாட்டு வங்கியில் பெறப்பட்ட 90,000 டாலர் கடனை முதலீட்டாளர் தனது சொந்தப் பொறுப்பிலேயே முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
2013-ஆம் ஆண்டு, அமெரிக்க மத்திய வங்கி தனது பணப்புழக்கக் கட்டுப்பாடுகளை (Taper Tantrum) அறிவித்தபோது, இந்தியாவிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் வேகமாக வெளியேறின. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து, கடுமையான டாலர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் அப்போதைய ஆளுநர் ரகுராம் ராஜன், இதே 'FCNR(B) சிறப்பு சலுகையை' (Swap Window) திட்டத்தை 2013ம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். திட்டம் அறிவிக்கப்பட்ட வெறும் 3 மாதங்களுக்குள் இந்தியாவிற்குள் 34 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு வந்து சேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.